பராமரிப்பு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தம்! எவ்வளவு நேரம் முழு விவரம்
சென்னை கோடம்பாக்கம், பல்லாவரம் தாம்பரம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையானது இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 41 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை வழித்தடங்களில் இன்று காலை 11 மணி முதல் 3.15 மணி வரையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10.30 முதல் மதியம் 2.30 மணி வரை மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில்கள் முழுவதுமாக நாளை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே முற்பகல் 11.55, நண்பகல் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, பிற்பகல் 2.40, 3.10 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும்.
மறுமார்க்கமாக காலை 9.30, 10.55, முற்பகல் 11.30, நண்பகல் 12 மணி, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.
இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை மற்றும் பேருந்துகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்