ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் போது டிசி கேட்டு வற்புறுத்தக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் போது டிசி கேட்டு வற்புறுத்தக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கக் கோரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை கேட்டு வற்புறுத்தக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக டிசியினை பள்ளியில் கேட்ட போது கட்டண பாக்கி நிலுவைyஇல் உள்ளதால் டிசி வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அனைத்து தனையார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டனர்
இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாற்று சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு மாணவனின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளதாகக் கூறிய நீதிபதி, வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேறு பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.
மாற்றுச் சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் ,மேலும் மாற்றுச் சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்வதற்கான ஒரு ஆவணமே தவிர, பெற்றோரிடமிருந்து கட்டண பாக்கியை வசூலிக்கக்கூடிய கருவி அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான தமிழ்நாடு கல்வி விதிகள் மற்றும் விதிமுறைகளில் மூன்று மாதங்களில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள்