Breaking News

ஜிஎஸ்டி குளறுபடிகள் குறித்து சுட்டிக்காட்டிய ஓட்டல் அதிபர் , மன்னிப்பு கேட்ட வீடியோ, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் என்ன நடந்தது முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜிஎஸ்டி குளறுபடிகள் குறித்து சுட்டிக்காட்டிய ஓட்டல் அதிபர் , மன்னிப்பு கேட்ட வீடியோ, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் என்ன நடந்தது முழு விவரம்



மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை கொடிசியா அரங்கில் கடந்த 11ம் தேதி கோவை தெற்கு எம்எல்ஏவும், பாஜ மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் கொங்கு மண்டல தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் ஜி.எஸ்.டி தொடர்பாக குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். 

அப்போது, கோவையை சேர்ந்த ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டியில் ஏற்படும் பிரச்னைகளை கூறினார் அதில் 

உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி, உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி என உள்ளது. இதனால் கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிற்கும் குறையுங்கள். தயவு செய்து ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுகிறது மேடம். ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட் தான். ஒரே கிச்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்'' என கூறினார்.அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதற்கு விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், ஓட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை, அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.  என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியதாக வீடியோ ஒன்று நேற்று காலையில் வேகமாக பரவியது. 

அதாவது அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் இருக்கிறார். நீங்க வயதில் பெரியவங்க, தயவு செய்து மன்னித்து விடுங்கள்' நான் எந்த பார்ட்டியிலும் இல்லை. தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார்.

ஜிஸ்டி பற்றி கேள்வி கேட்ட ஒரு பிரபல தொழிலதிபரை நேரில் வரவழைத்து எழுந்து நின்று கை கூப்பி மன்னிப்பு கேட்க வைத்தது குறித்து  சமூக வலைதளங்களில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக மக்கள் கண்டனங்களை குவித்து வருகின்றனர். 

அதே நேரத்தில், சீனிவாசன் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback