Breaking News

நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கெல்லாம் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கெல்லாம் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். 

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழகம், புதுவைக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கக்கூடும்.

இதன்காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் தான் இருக்கிறது. இன்னும் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வருகிறது.நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய காரணத்தைக் கருத்தில் கொண்டு, ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் என்பதற்கு எல்லா இடங்களிலும் 20 செ.மீ மழை பெய்யும் என்பதில் அர்த்தமில்லை. கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

நேற்று (15-10-2024) காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 0530 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (16-10-2024) காலை 0830 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும். 

16.10.2024: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

17.10.2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, சுடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

18.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback