காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மரணமடைந்தார் Kumari Ananthan passes away
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மரணமடைந்தார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(93) காலமானார் சென்னை விருகம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த குமரி அனந்தன் உயிரிழப்பு
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள குமரி அனந்தன் மகளும் தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு தமிழக அரசின் தகைசால் விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. இவர் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் இருந்துள்ளார்.
குமரி ஆனந்தன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனது தந்தை மறைவு குறித்து தமிழிசை வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில்
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் இன்று என் அம்மாவோடு இரண்டர கலந்து விட்டார்.குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது.
வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார். தமிழக அரசியலில் அவர் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.
பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர். இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா. நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்.
நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம். போய் வாருங்கள் அப்பா. தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன். நன்றி அப்பா. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்